மதுரையை இலக்கிய சான்றுகள் வழியாக அளப்பரிய இன்பம் ஏற்படும்… அத்தகைய இலக்கிய சான்றுகளை உறுதிப்படுத்தும் வகையில் நிறைய அகழாய்வு முடிவுகள், தொல்லியல் சான்றுகள் மதுரை ஊர் தோறும் இருக்கின்றன… எல்லா சந்து பொந்துகளில் வரலாறு நிறைந்து காணப்படும்.. மேலும் மதுரையின் கிழக்கு திசையை குறிக்க, பெரும்பாலும் சொல்லுவது யானைமலையை தான்.
மலை எவ்வளவு பெரியதோ அந்த அளவுக்கு வரலாற்றையும் தாங்கி கொண்டு இருக்கிறது… எங்களால் முழுவதையும் ஒரே மரபு நடையில் காண முடியாது என்பதால் மூன்று முக்கிய இடங்களை தேர்வு செய்தோம்: லாடன் கோயில், யோக நரசிம்மர் கோயில், சமண சிற்பங்கள்… முன்னதாகவே கூறியது போல் முனைவர் தேவி அறிவு செல்வம் இந்த வரலாற்று/தொல்லியல் செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சுமார் காலை 8:30 மணிப் போல் ஒருவர் பின் ஒருவராக வரத் தொடங்கினோம்… திருநெல்வேலியில் இருந்து நண்பர் தீக்கதிர் விஜய், நண்பர்கள் ராகுல், ஜனா, கணேசப்பாண்டி, குழந்தைகள் மது, சண்முகம், சமித்ரா, மகிழன், மற்றும் தமிழ் மரபு செயற்குழு உறுப்பினர்கள் என 16 பேர் அடங்கிய குழு இந்த மரபு நடையில் பங்கு கொண்டார்கள். பின் ஒன்பது மணி அளவில் லாடன் கோயிலில் அனைவரும் ஒன்று கூடினோம். முனைவர் பாப்பா அனைவரையும் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக அவருடைய இனிய கொஞ்சும் தமிழில் வரவேற்றார்.
முனைவர் சுபாஷிணி பல ஆண்டுகளுக்கு முன்பாக சென்று இந்த லாடன் கோயிலை முனைவர் வள்ளி சொக்கலிங்கம் அவர்களின் உதவியுடன் ஆவணப்படுத்தி இருக்கிறார். அந்த காணொளியை முதலில் பார்த்தோம்.
அடுத்ததாக
லாடன் கோயிலில் முன் பெரிய சிமெண்ட் முற்றம் ASI அமைந்துள்ளது… நாங்கள் வட்டமாக அமர்ந்து தேவி அக்கா கூறும் தகவல்களைக் கேட்க உதவியாக இருந்தது.
தேவி அக்கா லாடன் கோயில் அமைப்பு முறை பற்றி விளக்கியதோடு மட்டும் அல்லாமல் ஒரு சிற்பத்தை கண்டவுடன் எப்படி கண்டறிவது என்ற தகவல்களை பகிர்ந்து கொண்டார். கோயிலின் அமைப்பு முறையை வைத்து அது பாண்டிய கட்டடக்கலையா, சோழர் கட்டடக்கலையா என எப்படி கண்டறிவது என்பதையும் விளக்கினார். லாடன் கோயிலுள்ள சிற்பம் முருகன் தெய்வானை என்பதனை சான்றுகளுடன் விளக்கினார்.. மேலும், இந்த கோயிலில் ஒரு வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது. அதனில் உள்ள விவரங்களையும், கோயிலிலுள்ள சிற்பங்களை மனதில் படியும் படி விவரித்தார்.
அடுத்ததாக யோக நரசிம்மர் கோயிலுக்கு சென்றோம்.. ஞாயிறு என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது.. எங்களுக்கு மகிழ்ச்சி.. கிரந்த கல்வெட்டை முதன்முதலில் நான் இங்கே பார்த்தேன். கோயிலில் உள்ள மற்ற 20 மேற்பட்ட கல்வெட்டுக்களை சுவர்களில் காட்டி வாசிக்க உதவியும் செய்தார் தேவி அக்கா… இந்த கோயிலில் உள்ள சோழர்கால தானக் கல்வெட்டு அதனை பாதுகாக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் பற்றி கூறினார். வரலாற்றை தெரிந்து கொள்ளவது மட்டுமல்லாமல் அதனை பாதுகாக்கும் அவசியத்தை அறிந்து கொண்டோம்.
சமணச் சிற்பங்களை நாங்கள் அடைவதற்கு முன்னரே கேட் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு எல்லா ஏற்பாடுகளை மணிவண்ணன் அண்ணன் செய்து வைத்திருந்தார். ஒவ்வொரு சமண சிற்பங்களையும் முறையே விளக்கி, மதுரையில் உள்ள மற்ற சமணர் சிற்பங்களை இதனுடன் தொடர்புபடுத்தி விவரித்தார் அக்கா….
இறுதியாக மதிய உணவு முனைவர் தேவி அவர்களின் வீட்டில் அருந்தி விட்டு நாங்கள் எல்லோரும் விடைப்பெற்றுக் கொண்டோம்.
இந்த மரபு நடையை எப்படி அமைக்க வேண்டும், எந்த விஷயமெல்லாம் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்று இதனைத் திட்டமிட்டு கொடுத்த முனைவர் சுபாஷிணி அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த பயணத்தில் தொல்லியல் விவரங்கள் மட்டுமன்றி நிறைய வரலாற்று செய்திகளை பகிர்ந்து கொண்ட முனைவர் தேவி அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றி. வந்தவர்கள் அனைவரும் சிந்தித்து தங்களது கேள்விகளை கேட்கும் போது, நிதானமாக பதிலளித்த தேவி அக்காவிற்கு எங்களது இதயம் கனிந்த பாராட்டுக்கள்
மீண்டும் ஒரு மரபு நடையில் சந்திப்போம் விரைவில்