நன்றி: தினமலர்
https://m.dinamalar.com/detail-amp.php?id=3307286
“உசிலம்பட்டி பகுதியில் தொல்குடி மரபணு குடும்பத்தினருடன் ஆய்வாளர்கள் சந்திப்பு”
உசிலம்பட்டி பகுதியில் தொல்லியல் சார்ந்த இடங்களில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்மரபு அறக்கட்டளை நிர்வாகிகள், தொல்குடி மரபணு கொண்ட ஜோதிமாணிக்கம் விருமாண்டி குடும்பத்தினரை சந்தித்து பேசினர்.
உசிலம்பட்டி பகுதியில் 3000 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழ்ந்து வருவதற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைக்கின்றன. மனித நாகரீகம் துவங்கிய காலத்தில் ஆப்ரிக்க கண்டத்தில் இருந்த மரபணுவை ஒத்த விருமாண்டி குடும்பத்தினர் ஜோதிமாணிக்கம் கிராமத்தில் உள்ளனர். அவர்களை ஆய்வாளர்கள் சந்தித்னர்.
ஆஸ்திரேலிய பழங்குடிகள் பயன்படுத்தும் வளரி (பூமாராங்) ஆயுதத்தை, இப்பகுதியின் கருமாத்தூர் மக்கள் கோயிலாங்குளம் பட்டசாமி கோயிலில் காணிக்கையாக அளித்து வழிபடுகின்றனர். அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், கி.பி., 9ம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையான கல்வெட்டுகளைக் கொண்ட ஆனையூர் மீனாட்சியம்மன் ஐராவதேஷ்வரர் கோயில், வகுரணி சந்தைப்பட்டி மூன்றுமலைப்பகுதி புலிப்பொடவு குகைக்குள் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை பார்வையிட்டனர்.
இந்தப்பகுதியில் விரிவான தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசிடம் வலியுறுத்துவோம். பொது மக்களும் தங்கள் பகுதியில் காணப்படும் தொல்லியல் சான்றுகளை பாதுகாக்கவும், ஆவணப்படுத்தவும் முன்வர வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.